ஆப்கானின் தலைநகரான காபூலுக்கு அருகில் தலிபான்கள் வசமாகாமல் இதுவரை எஞ்சியிருந்த பஞ்ஷீர் மாகாணத்தை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகப் படைகள் பின் வாங்கத் தொடங்கி ஒரு சில வாரங்களிலேயே தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். எனினும் தலைநகரான காபூலுக்கு அருகில் இருக்கும் பஞ்ஷீர் மாகாணத்தில் உள்ள பஞ்சீர் போராளிகள் தாலிபன்களுக்கு எதிராக போராடி வந்தனர்.
இந்நிலையில் பஞ்ஷீர் மாகாணத்தை தாங்கள் நேற்று வெள்ளிக்கிழமை கைப்பற்றிவிட்டதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். எனினும் பஞ்ஷீர் போராளிகள் அதை மறுத்துள்ளனர் .
பஞ்ஷீர் மாகாண போராளிகளில் முக்கிய நபரான அம்ருல்லா சலே தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்பட்டது. எனினும் அதை மறுத்து அம்ருல்லா சலே காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சுமார் ஒன்றரை முதல் 2 இலட்சம் பேர் வாழும் பஞ்ஷீர் மாகாணம் கடந்த பல ஆண்டுகளாக தாலிபானுக்கு எதிராக போராடி வருகிறது. இந்த மாகாணப் படையில் முன்னாள் ஆப்கான் அரச படை வீரர்கள், உள்ளூர் ஆயுததாரிகள் உள்ளனர்.
இப்படையை அஹ்மத் மசூத் தலைமை தாங்கி வழிநடத்திவருகிறார். 1980களில் ரஷ்யப் படைகளுக்கு எதிராகவும், 1990களில் தாலிபன்களுக்கு எதிராகவும் இவரது தந்தை அஹ்மத் ஷா மசூத் போரிட்டார்.
பஞ்ஷீர் மாகாண போராளிகளில் முக்கிய நபரான அம்ருல்லா சலே வெளியிட்டுள்ள ஒரு காணொளியில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
நாங்கள் நெருக்கடியான சூழலில் தான் இருக்கிறோம். எனினும் தாலிபன்களை எதிர்கொண்டு வருகிறோம். ஆனால் ஒருபோதும் நாங்கள் சரணடையமாட்டோம், நாங்கள் ஆப்கானிஸ்தானுக்காக நிற்கிறோம் எனவும் அதில் அவா் தெரிவித்துள்ளார்.
தான் ஆப்கானிஸ்தானை விட்டு ஓடிவிட்டதாகக் கூறுவது தவறு என்பதை உறுதிப்படுத்தவே இந்த காணொளியைப் பகிர்கிறேன் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.
இதனை மறுத்துள்ள தலிபான்கள், தற்போது ஆப்கானிஸ்தான் முழுக்க எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதுவரை தொல்லை கொடுத்து வந்தவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். இப்போது பஞ்ஷீர் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.